Friday, September 5, 2008

சரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்!!


இன்று சரோஜா திரையிடப்பட்ட திரையரங்குகளிலில் இருந்து மேலாளர்கள் தொலைபேசி படம் குறித்து நல்ல விதமாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். படம் ரசிகர்களிடையே நல்ல ஆதரவையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ஒரு படம் ஹிட் ஆகுமா ஆகாதா என்பதை அப்படத்தை இயக்கிய இயக்குனர், தயாரித்த தயாரிப்பாளரை விட மிகத்துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள் தியேட்டர் ஊழியர்கள்.

சரோஜா படம் பற்றி தமிழகமெங்கும் படத்தை வெளியிட்ட தியேட்டர்களில் பணிபுரியும் ஊழியர்கள் ‘ஸ்யூர் ஹிட்' என்று நம்மிடையே தெரிவித்திருக்கிறார்கள். படம் சரியில்லை என்றால் 'வேஸ்ட்டுங்க' என்று முகத்திலடித்தாற்போல சொல்லிவிடுவது இவர்கள் வாடிக்கை. முதல் நாள் என்பதால் இன்று நிறைய இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. ரிசர்வேஷன் சார்ட்டை சோதித்ததில் சனி, ஞாயிறு நாட்களில் நிறைய பேர் குடும்பமாக வருவார்கள் என்று தெரிகிறது.

வெங்கட்பிரபுவின் முந்தைய படைப்பான சென்னை-600028 படத்தின் வசூல் சாதனையை சரோஜா சில நாட்களிலேயே முறியடித்துவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அனைவரையுமே படம் திருப்திபடுத்தியிருப்பதால் படத்தின் வெற்றி உறுதியாகியிருக்கிறது.

பிரமிட் சாய்மிரா நிறுவனம் இப்படத்துக்கான விளம்பர தந்திரங்களை நூதன முறையில் உருவாக்கியிருக்கிறது. சரோஜா விளம்பரங்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை சாலையில் நீங்கள் கண்டால் அங்கேயே சரோஜா படத்துக்கான டிக்கெட்டுகளை வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

Thursday, September 4, 2008

எந்திரமானது ‘ரோபோ!'


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட திரைப்படம் ரோபோ. இப்படத்தின் பெயர் திடீரென மாற்றப்பட்டிருக்கிறது.

ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவாகிறது. சில காலம் முன்பு இந்தி நடிகர் ஷாருக் கான் இப்படத்தை தயாரித்து நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இப்படத்திலிருந்து முற்றிலுமாக ஷாருக்கான் விலகினார்.

அதைத் தொடர்ந்து தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரோபோவில் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்துக்கான மேக்கப் டெஸ்ட் அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கும் வேளையில் திடீரென ரோபோ என்ற பெயரில் 9 தலைப்புகளை இந்தியில் ஷாருக்கான் பதிந்து வைத்து ஷங்கருக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதையடுத்து ஷங்கர் இப்போது படத்தின் பெயரை மாற்ற முடிவெடுத்திருக்கிறார். ரோபோ என்பது ஆங்கில பெயராக இருப்பதால் தமிழில் வரிவிலக்கு கிடைக்காது என்ற காரணம் காட்டி படத்தின் பெயரை ‘எந்திரம்' என்று மாற்றியிருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.

எந்திரம் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஒரு மாதகாலம் நடைபெற இருக்கிறது. இதற்காக நாளை ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

Monday, September 1, 2008

தடைகளை தாண்டி வெளிவரும் சரோஜா!


அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் வரும் 5ம் தேதி வெளிவரும் சரோஜா திரைப்படத்துக்கு தடை என்று சில செய்தித்தாள்களிலும், இணையத் தளங்களிலும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. இந்தியன் வங்கியில் சரோஜா திரைப்படத்துக்காக தயாரிப்பாளர் வாங்கிய கடனுக்காக திரைப்படத்தை வெளியிட இடைக்காலத்தடையை நீதிமன்றம் விதித்திருந்ததாக அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இச்செய்தி பொய்யானது என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. கடன் வசூலிக்கும் தீர்ப்பாயத்தில் வந்திருக்கும் விவகாரம் வேறு பழைய விவகாரமென்றும், அந்த விவகாரத்துக்கும் சரோஜா படத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் தயாரிப்பாளர் தரப்பு கூறியிருக்கிறது. மேலும் இவ்விவகாரம் நேற்றே தீர்க்கப்பட்டுவிட்டது. படம் வெளியாவதில் எந்த சிக்கலுமில்லை, யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

வருகிற 5ஆம் தேதி 'சரோஜா' வெளிவருகிறாள். சென்னை-600028 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படம் இது என்பதால் மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. சென்னை-28 இளைஞர் படையோடு பிரகாஷ்ராஜ், ஜெயராம் ஆகிய முன்னணி மூத்த நடிகர்களும் இணைந்திருப்பதால் திரையுலகிலும் இப்படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Thursday, August 28, 2008

வெளிவருகிறாள் சரோஜா!


செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளை ஆக்கிரமிக்க வருகிறாள் சரோஜா. தணிக்கைக்குழு “யூ” சான்றிதழ் வழங்கி திரையிட தயாராக இருக்கிறது சரோஜா. சென்னை-600028 படத்தின் வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு பன்மடங்காக இருக்கிறது. இந்தப் படம் ஒரு த்ரில்லர் படம் என்று தயாரிப்பு வட்டாரம் சொல்கிறது. படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்.

படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இரண்டே நாட்களில் படத்துக்கான இசையை கம்போஸ் செய்து சாதனை படைத்திருக்கிறார். எஸ்.பி.பி. சரண், பிரேம்ஜி அமரன், சிவா, வைபவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவருகிறது. அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா இப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குனர் சேரன் ஒரு முக்கியமான பாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரமிட் சாய்மிரா நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Monday, August 25, 2008

வேட்டைக்காரனாக விஜய்!


பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் வில்லு. வில்லு திரைப்படத்துக்கு பிறகு ஏ.வி.எம். நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துத்தர ஒப்புக்கொண்டிருந்தார் விஜய். ஏ.வி.எம்.முக்காக விஜய் நடிக்கப் போகும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தை பிரம்மாண்டமான படமாக உருவாக்க ஏ.வி.எம். நிறுவனமும் விஜயும் விரும்பினார்கள்.

படத்துக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. “வேட்டைக்காரன்”

எம்.ஜி.ஆர் நடித்து வெற்றிகண்ட வேட்டைக்காரன் படத்தின் பெயரையே விஜய் படத்துக்கும் சூட்டுகிறார்கள். முன்னதாக முரட்டுக்காளை என்ற பெயரில் ஏ.வி.எம்.முக்கு நடிக்க விஜய் விரும்பினார் என்கிறார்கள். அனேகமாக அசின் இந்தப் படத்தின் கதாநாயகியாக இருக்கலாம். படத்தின் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயர் விரைவில் வெளிவரும்.

Tuesday, August 5, 2008

கண்ணாமூச்சி ரே.. ரே..

'ஆசை தான் அழிவுக்கு காரணம்!'புத்தன் சொல்லிதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? நம் வாழ்க்கையிலேயே பலரைப் பார்த்திருப்போமே? மண்ணாசை மன்னனையே கவிழ்க்கும், பேராசை ஆண்டியையும் அலைக்கழிக்கும். ஆசைப்பட்டு ஆடி அடங்கிப் போனவனின் வாழ்க்கை தான் இந்த மாத சிம்ரன் சின்னத்திரையில் வரும் ‘கண்ணாமூச்சி ரே.. ரே..'

அழகான மனைவி, ஆசைக்கு குழந்தை என்று அளவான வாழ்க்கை வாழ்பவனுக்கு திடீரென்று கொழுந்தியாள் மீதும் ஆசை வருகிறது. ஆசைக்கு அடிமையானவன் ஆடும் ஆட்டங்களும், முடிவும் என்னவென்பதை இம்மாத குறுந்தொடரில் காணலாம். ஆடிமாதத்தில் அம்மனாக அவதாரமெடுத்த சிம்ரன், ஆவணியில் மாறுபட்ட நடிப்பில் அசத்தப்போகிறார்.

சிம்ரனுடன் ராம்ஜி, சேத்தன், பிருந்தாதாஸ், ராஜசேகர், அமரசிகாமணி, சங்கீதாபாலன், வந்தனா, பேபி ஹரிணி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். மூலக்கதை : குரு தனபால். கதை இலாகா : சபரீஷ்வரன், திலீபன், மணி. திரைக்கதை, வசனம் : ஸ்ரீனிவாஸ் வெங்கடாச்சலம். ஒளிப்பதிவு : ஸ்ரீனிவாஸ். இயக்கம் : பாலாஜி யாதவ். கிரியேட்டிவ் ஹெட் : சுபாவெங்கட்.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30க்கு காணத்தவறாதீர்கள் சிம்ரன் சின்னத்திரை.





Thursday, July 31, 2008

குசேலன் பர்ஸ்ட் ரிவ்யூ!


கலக்கலாக வந்திருக்கிறது படம். சூப்பர் ஸ்டார் படத்தில் ஒரு மணி நேரத்துக்கு பளிச்சிடுகிறார். பசுபதி, மீனா, நயன்தாரா, வடிவேலு, சந்தானம், ஆர்.சுந்தரராஜன் என்று நட்சத்திரப் பட்டாளம். படம் முழுக்க சிரிக்கவும், அழவும், நெகிழவும், சிந்திக்கவும் ஏராளமான காட்சிகள் உண்டு.

சூப்பர்ஸ்டார் ரசிகரான வடிவேலு சூப்பர் ஸ்டாரை சந்திக்க எடுக்கும் முயற்சிகள் வயிற்றைப் பதம் பார்ப்பவை. இப்படத்தில் இடம்பெற்ற சந்தானத்தின் காமெடி பெரிய அளவில் பேசப்படும்.

சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டாராகவே தோன்றி அவரது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். எப்போ வரப்போறீங்க? எதுக்கு இமயமலைக்கு அடிக்கடி போறீங்க? ரக கேள்விகளுக்கு பதிலளிப்பதின் மூலம் தன்னுடைய மனதை திறந்து காட்டப் போகிறார்.

எங்கள் படத்தைப் பற்றி நாங்கள் பேசுவதை விட, நாடு பேசப்போவதை கேட்க ஆவலாக இருக்கிறோம்!!!

Thursday, July 17, 2008

சிம்ரனின் பதினான்கு வேடங்கள் - சிறப்பு படங்கள்!!

திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் சிம்ரன் திரையில் ‘நவவெள்ளி' ரசிகர்களின் ஆரவார வரவேற்பை பெற்றிருக்கிறது. விதவிதமான கெட்டப்புகளில் வித்தியாசத்தை அள்ளித் தெளிக்கும் சிம்ரனின் பதினான்கு வேடப் படங்களையும் பதிப்பிக்குமாறு ஏராளமானோர் நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். அவர்களின் ஆர்வத்தை ஈடு செய்ய சிம்ரனின் வித்தியாசமான கெட்டப்புக்களோடு கூடிய படங்கள் இதோ :














Friday, July 4, 2008

ஜெகன்மோகிணி நமீதா COOL STILLS












Thursday, July 3, 2008

200வது நாள் காணும் ரேகா ஐபிஎஸ்!

மெகாசீரியல் என்றாலே நாயகி மூக்கை சிந்திக்கொண்டு தானிருக்க வேண்டுமா? கிரண்பேடி மாதிரி எதிரிகளை பறந்து பறந்து அடிக்கக்கூடாதா? என்று சிந்தித்ததின் விளைவே ரேகா ஐபிஎஸ் நெடுந்தொடர். மற்ற மெகாசீரியல்களின் ட்ரெண்டோடு மாறுபட்டு வந்த இந்த தொடர் எத்தைகைய வரவேற்பை பெறும் என்ற ஐயம் ஆரம்பத்தில் அனைவருக்கும் இருந்தது.

ஐயங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி 200வது எபிசோடை கொண்டாடுகிறார் ரேகா ஐ.பி.எஸ். கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இத்தொடர். கதாநாயகனாக விஜய் ஆதிராஜூம், கதாநாயகியாக அனுஹாசனும் நடிக்கிறார்கள்.

கதை - சித்ரா லட்சுமணன், திரைக்கதை - தவமணி வசீகரன். வசனம் - ஆர்.என்.ஆர்.மனோகர், ஒளிப்பதிவு - தியாகராஜன், இயக்கம் : ஓ.என்.ரத்னம், கிரியேட்டிவ் ஹெட் - சுபாவெங்கட்.









Tuesday, July 1, 2008

குசேலன் படவிழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு!


குசேலன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. விழாவில் ரஜினியின் பேச்சு பரபரப்பாக அமைந்தது. அவர் பேசியதாவது :

“அம்மா, அப்பா, குரு எல்லாமே எனக்கு கே.பாலசந்தர்சார் தான். இன்று எனக்கு கிடைத்திருக்கும் பெருமை, புகழ் அத்தனையும் அவரைத்தான் சேரும். குசேலன் வெள்ளிவிழா கொண்டாடும் என்கிறார்கள். படத்தின் வெற்றி எந்த அளவுக்கு இருக்கும் என்பதில், படத்தை வாங்கியிருக்கும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தை விட, நான் `டென்ஷன்' ஆக இருக்கிறேன். ஆண்டவன் அருளால் நிச்சயம் வெற்றி பெறும்.

'அண்ணாமலை' படத்துக்குப்பின், நான் சொந்த பட நிறுவனம் தொடங்கியபின், 12 வருடங்களாக என்னிடம் பாலசந்தர் சார் `கால்ஷீட்' கேட்கவில்லை. சந்திரமுகி, சிவாஜி ஆகிய படங்களில் நடித்தபின், பெரிய அளவில்தான் படம் செய்ய வேண்டும் என்று அவரிடம் நான் கூறினேன். இடையில் ஒரு சின்ன படமும் பண்ணலாம்ப்பா என்றார்.

மலையை தூக்கி காட்டிவிட்டு, கடப்பாரையை தூக்கி காட்டினால் ஜனங்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என்று நான் யோசித்தேன். பாட்ஷா, முத்து, சிவாஜி, சந்திரமுகி ஆகிய படங்களுக்குப்பின், எதிர்பார்ப்பு அதிகம் ஆகிவிட்டது. அதனால்தான் கவிதாலயா நிறுவனத்துடன் செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார், தெலுங்கு பட அதிபர் அஸ்வினிதத் ஆகியோரையும் இணைத்து இந்த படத்தை ஆரம்பித்தோம். இரண்டு பேர் இணைந்தாலே சண்டை வரும். அரசியல் வரும். ஆனால் இங்கே மூன்று பேர் இணைந்தாலும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு எந்த குழப்பமும் இல்லாமல், படம் எடுத்தார்கள்.

படப்பிடிப்பின்போது, “ரஜினி சந்தோஷமா இருக்காரா, அவர் சந்தோஷம்தான் முக்கியம்” என்று பாலசந்தர் சார் அடிக்கடி விசாரித்துக் கொண்டிருந்தார். என்னை குழந்தை மாதிரி பார்த்துக்கொண்டார்கள். என் இளமையான தோற்றம் பற்றி குறிப்பிட்டார்கள். அதற்கு அன்புதான் காரணம். படப்பிடிப்பு குழுவினர் காட்டிய அன்புதான் காரணம்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளராக யாரை போடலாம்? என்று யோசித்தபோது, இளையராஜாதான் என் மனதில் வந்தார். ஒருநாள், `வெயில்' படத்தின் சி.டி.யை கேட்டபோது, பாடல்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருந்தது. ஜீ.வி.பிரகாஷ் எப்படி? என்று டைரக்டர் ஷங்கரிடம் கேட்டேன். அருமையான பையன் என்றார். ரகுமானிடம் உள்ள பிளஸ் பாயிண்ட் அத்தனையும் இவரிடம் இருக்கிறது. மைனஸ் பாயிண்ட் என்னன்னும் தெரியலை. இரவில்தான் வேலை செய்கிறார்.

ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, ஒருநாள் என் பக்கத்தில் ஒரு பையன் வந்து நின்றான். ரொம்ப நேரமாக என்னையே பார்த்துக்கொண்டு பக்கத்தில் நின்றான். இந்த பையனை அனுப்பாமல், பக்கத்தில் நிற்க வைத்து இருக்கிறார்களே என்று எனக்கு கோபம் வந்தது. அந்த பையனிடம், “போட்டோ எடுக்கணுமா?” என்று கேட்டேன்.

“ஆமாம்” என்றான். பக்கத்தில் நின்றவர்கள், “சார் இவர்தான் ஜீ.வி.பிரகாஷ்” என்றார்கள். பாடல்களை கேட்டு ஆச்சரியப்பட்டேன். இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் கலந்த இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். அதற்கு டைரக்டர் வாசு முக்கிய காரணம். பி.ஆர்.ஓ. வேலை உள்பட எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தார். இந்த படத்தில் நான் மிக இளமையாக இருப்பதாக எல்லோரும் சொன்னார்கள். சிலருக்கு சந்தேகம். இமயமலைக்கு போய் வேர் ஏதாவது சாப்பிடுகிறாரோ என்று. நான், வெள்ளை நிறத்தில் உள்ள உணவுவகைகளை சாப்பிடுவதில்லை. உப்பு, சர்க்கரை, மாத்திரை, அரிசி சாதம், பால், தயிர், நெய் இதெல்லாம் சாப்பிடுவதில்லை. 40 வயதுக்கு மேல் உணவு பழக்கவழக்கங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடவேண்டும். 4 வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

நான் இப்படி சொன்னதற்காக, ஒரேயடியாக உணவை குறைத்து விடாதீர்கள். மன அழுத்தம் வந்துவிடும். 20 வயதில் இருந்து 40 வயது வரை நல்லாவே சாப்பிடலாம். வெள்ளை நிற உணவுகளை தவிர்த்தாலே உடம்பு நல்லாயிருக்கும். உடம்புக்கு ஆயில் வேண்டும் அல்லவா?

நான் நல்லா இருக்கேன். நல்லாவே இருப்பேன். நல்லதே நடக்கும்.

இவ்வாறாக ரஜினிகாந்த் பேசினார்.

Monday, June 30, 2008

இன்று முதல் குசேலன் இசை!


தமிழ் திரையுலகில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் குசேலன் திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீடு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இரண்டேகால் கோடி ரூபாய்க்கு குசேலனின் இசை உரிமையை பிக் மியூசிக் நிறுவனம் பெற்றிருக்கிறது. இப்படத்தின் இசைத்தட்டு நாளை (01-07-08) முதல் கடைகளில் கிடைக்கும். சிடி ரூ.99/-க்கும், கேசட் ரூ.45/-க்கும் விற்கப்படும்.

படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிறது. இதில் மூன்று பாடல்களில் ரஜினிகாந்த் இடம்பெறுகிறார். 75 வருட தமிழ் சினிமா வரலாற்றை போற்றும் வகையில் சினிமா சினிமா என்ற பாடல் ஷங்கர் மகாதேவன் குரலில் இடம்பெறுகிறது. இந்தப் பாடலே படத்தில் ரஜினியின் ஓபனிங் பாடலாகவும் இருக்கும்.

இன்று நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் விழாவில் ரஜினியோடு பசுபதி, நயன்தாரா, மீனா, வடிவேல், இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் கே.பாலச்சந்தர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் :

1) சினிமா சினிமா
பாடியவர் : ஷங்கர் மகாதேவன்
பாடலாசிரியர் : வாலி

2) சொல்லலாமா
பாடியவர்கள் : ஹரிஹரன், சுஜாதா, பேபி ரஞ்சனி, பேபி பூஜா
பாடலாசிரியர் : பா.விஜய்

3) ஓம் ஜாரே
பாடியவர்கள் : தலேர் மெஹந்தி, சித்ரா, சாதனா சர்க்கம்
பாடலாசிரியர் : வாலி

4) சாரை
பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் குழுவினர்
பாடலாசிரியர் : டாக்டர் க்ரிதயா

5) பேரின்ப
பாடியவர்கள் : கைலாஷ் கேர், ப்ரசன்னா
பாடலாசிரியர் : யுகபாரதி

Friday, June 27, 2008

14 வேடங்களில் சிம்ரன்!





தசாவதாரத்தில் கூட கமல்ஹாசன் பத்து வேடங்களில் தான் நடித்தார். சிம்ரன் 14 வேடங்களில் சிம்ரன் சின்னத்திரையில் தோன்ற இருக்கிறார்.

மனிதர்களுக்கு தன்னம்பிக்கையையும், பக்தியையும் தரவும், தீயவர்களுக்கு தகுந்த தண்டனையை தரவும் ஆதிபராசக்தி அம்மன் நடத்தும் திருவிளையாடல் தான் இந்தமாத சிம்ரன் திரையில் வர இருக்கும் ‘நவவெள்ளி'. தெய்வரகசியத்தை தெரிந்துகொண்ட ஒரு தீயநோக்கம் கொண்டவனை தனது பக்தை மூலமாக ஆதிபராசக்தி எப்படி வெற்றி காண்கிறாள் என்பதை சின்னத்திரையில் தினமும் காணலாம்.

திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஜெயா டிவியில் இம்மாதம் இத்தொடரை காணலாம்.

பூவிலங்கு மோகன், ஓ.ஏ.கே.சுந்தர், அனுராதாகிருஷ்ணமூர்த்தி, சுப்புலட்சுமி மற்றும் பல முன்னணி சின்னத்திரை நட்சத்திரங்கள் சிம்ரனோடு மின்னப் போகிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் : செல்வபாண்டி. ஒளிப்பதிவு : ஆசாத். இயக்கம் : அர்விந்த்ராஜ். கிரியேட்டிவ் ஹெட் : சுபா வெங்கட்.