Monday, February 4, 2008

அஜீத்தின் அடுத்த படம் கதை என்ன?


பில்லா வெற்றிக்கு பிறகு நடிக்கும் படம் என்பதால் அஜித் நடிக்கும் அடுத்த படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அய்ங்கரன் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ராஜூ சுந்தரம் இயக்குகிறார். ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படம் என்பதால் ஹாங்காங் சண்டை கலைஞர்கள் பங்குபெறுகிறார்கள். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஹாங்காங்கில் சத்தமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது.

இன்னமும் பெயரிடப்படாத இப்படத்துக்கு படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் என்னவோ, அந்த பெயர் வைக்கப்படும் என்கிறார்கள். இக்கதைக்கு அக்பர் என்ற பெயரை ராஜூசுந்தரம் முதலில் தேர்வு செய்திருந்தார். என்ன காரணங்களாலோ அப்பெயர் இப்போது நீக்கப்பட்டிருக்கிறது.

அதுபோலவே கதாநாயகி தேர்வும் ஜவ்வுபோல இழுத்துக் கொண்டிருக்கிறது. ரஜினியோடு சிவாஜி, விஜய்யோடு அழகிய தமிழ்மகன் என்று வரிசையாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரேயாவை ‘தல'க்கு கதாநாயகியாக போடலாம் என்று முதலில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. பின்னர் ஸ்ரேயாவின் கால்ஷீட் தேதிகள் ஒத்து வராததால் அதிரடியாக பிபாஷா பாஷுவை கதாநாயகியாக களமிறக்கப் படலாம் என்று செய்திகள் கசிந்தது. இப்போது கேத்ரினா கைப் பெயர் அடிபடுகிறது.

ஹாங்காங்கிலிருந்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியிருக்கும் படக்குழுவினர் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்குள்ளாகவாவது கதாநாயகி யாரென்று முடிவெடுத்து படப்பிடிப்புக்கு போக உள்ளனர்.

இதற்கிடையில் படத்தின் கதை என்னவென்று ஆளாளுக்கு ஒரு தகவலை கோலிவுட்டில் கசியவிடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கான் நடிப்பில் பராகான் இயக்கத்தில் வெளிவந்து பெரிய வெற்றியை அடைந்த ‘மே ஹூ நா' படத்தின் கதை தான் ரீமேக் செய்யப்படுகிறது என்று ஒரு தகவல். ராணுவஅதிகாரி ஒருவர் தீவிரவாதிகளை ஒடுக்குவது தான் அப்படத்தின் கதை. இடையில் அப்பா, தம்பி செண்டிமெண்ட் கலந்து நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கும். எப்படியிருந்தாலும் தாடியோடு வித்தியாசமான கெட்டப்பில் அஜித் நடிக்கும் முதல் படமென்பதால் (ஜீ படத்தின் சில காட்சிகளில் தாடியோடு தோன்றிருப்பார்) இப்படம் பெயரிடப்படுவதற்கு முன்பே பரபரப்பாக பேசப்படுகிறது.

0 comments: