Monday, February 4, 2008

மீண்டும் வருகிறது ரத்தக் கண்ணீர்!!


ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட சம்பிரதாயங்களை உடைத்து வெற்றிகொள்வது என்பது எப்போதோ ஒரே ஒருமுறை நடக்கும் புரட்சி. அப்போதெல்லாம் தமிழ் சினிமாக்களில் காதல் காட்சியை காட்டுவதென்றால் கூட கதாநாயகன், நாயகிக்கு முத்தம் தருவதைப் போல காட்டமாட்டார்கள். இருகிளிகள் கொஞ்சிக் கொள்வதைப் போல சிம்பாலிக்காக காட்டுவார்கள். நாயகன் நாயகிக்கு முத்தம் தருவதை யாராவது பார்த்துவிட்டு நாயகன் கெட்டவன் என்று நினைத்துவிட்டால்?

அப்படிப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் சமூகம் நல்லவன் என்று வரையறுத்து வைத்திருந்த கோடுகளை தாண்டிய ஒரு கதாபாத்திரத்தை கதாநாயகனாக்கி பெரும் வெற்றி பெற்ற படம் ‘ரத்தக்கண்ணீர்'. ஒரு நாயகனுக்கு அந்தகால தமிழ் சினிமா விதித்திருந்த விதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு அதிரடியாக நடித்திருந்தார் எம்.ஆர். ராதா. 1954ல் வெளிவந்த இத்திரைப்படம் திருவாரூர் தங்கராசு என்பவரால் எழுதப்பட்டு பல்லாயிரம் முறை மேடைநாடகமாகவும் மேடையேறியிருக்கிறது. இன்றைக்கும் எம்.ஆர்.ராதாவின் வாரிசுகள் இந்த கதையை மேடையேற்றுவதும், மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெறுவதையும் நாம் காணமுடிகிறது.

அயல்நாட்டில் படித்துவிட்டு இந்தியா திரும்பும் மோகன் இந்தியக் கலாச்சாரத்தை வெறுக்கிறான். அயல்நாட்டு பாணியில் மதுவும், மாதுவுமாக அவனது வாழ்க்கை போகிறது. பெற்ற தாயையும், மனைவியையும் தவிக்கவிட்டு வாழ்பவனது இறுதிக்காலம் மிக சோகமானது. இந்த கதைக்கருவை சில இடங்களில் நகைச்சுவையாகவும், சில இடங்களிலும் பொதுவுடைமையும், பகுத்தறிவும் கலந்து வருமாறும் இரட்டை இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கியிருந்தார்கள்.

பொன்விழா கண்டிருக்கும் இத்திரைப்படத்தை மீண்டும் தயாரித்தால் அதில் தான் நடிக்க விரும்புவதாக ஒரு முறை சத்யராஜ் தெரிவித்திருந்தார். ஆனால் அதிர்ஷ்டம் விவேக்குக்கு கிடைக்கும் போலிருக்கிறது. ரத்தக்கண்ணீர் படத்தை எழுதிய திருவாரூர் தங்கராசு ஒருமுறை விவேக் அப்படத்தின் ரீமேக்கில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

அனேகமாக புதிய ரத்தக்கண்ணீரை விவேக்கே இயக்கி கதாநாயகனாக நடிக்கலாம் என்று தெரிகிறது. நடிகர் ரஞ்சித் இப்படத்தை தயாரிப்பார் என்பதாகவும் தகவல் உலா வருகிறது. ஏற்கனவே ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா, பராசக்தி சிவாஜி போன்றோரை மிமிக்ரி செய்து மிக சிறப்பாக விவேக் நடித்து தமிழக முதல்வரிடமே பாராட்டு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Anonymous said...

    What means "பொன்விழா கண்டிக்கும் இத்திரைப்படத்தை"..?

  2. said...

    Adheypol Vivek asaippatta ADUTHTHA vEETTU PEN padaththayum yaravadhu remake seivaargala?

  3. Anonymous said...

    அன்றைய நிலையில் தொழுநோய் என்பது தீர்வு காண முடியாத நோய். இன்றைய எய்ட்ஸ் அன்று பெருநோய் என்று கூறப்பட்டது. அன்றைய மக்களின் மூடநம்பிக்கையை விரட்டி விழிப்புணர்வை ஏற்படுத்த உருவான சமூக நாடகமே ரத்தக்கண்ணீர்.விஞ்ஞானம் வளர்ந்துள்ள இக்காலத்திலும் அனைவரும் உணர வேண்டியது “ திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது “ என்பதேயாகும். (பி.கு) ரீமேக்னு சொல்றாங்க ஆனா பழைய படமே நல்லா இருக்கு ! எதுக்கு பணத்தை வீணடிக்கிறாங்கன்னு மக்கள் தரப்பு வாதத்தையும் கவனிக்கனும்ங்னா!