Friday, March 7, 2008

இன்று முதல் “குசேலன்!” - அதிரடி ஆரம்பம்!!


சிவாஜி ஃபீவரே இப்போது தான் முடிந்திருக்கிறது. அதற்குள்ளாக அடுத்தடுத்து படங்களை அறிவித்து இன்ப அதிர்ச்சி தந்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் சூப்பர் ஸ்டார் நடிக்கும் “ரோபோ” படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இடைக்கால நிவாரணமாக “குசேலன்” திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

மம்முட்டி நடித்த மலயாளப்படமான “கத பறயும் போள்” சூப்பர் ஸ்டாரை வெகுவாக கவர்ந்து விட அந்தப் படத்தை தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்து தானே மம்முட்டி கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பினார். கதாநாயகனாக பசுபதி, நாயகிகளாக மீனா, நயன்தாரா தேர்வு செய்யப்பட்டு கவிதாலயா தயாரிப்பில் பி.வாசு இயக்க தயாராகிறது குசேலன்.

தெலுங்கிலும் படம் தயாரிக்கப்படுவதால் இப்படத்துக்கான பூஜை ஹைதராபாத் ராமோஜிராவ் ப்லிம் சிட்டியில் போடப்படும் என்றார்கள். ஆயினும் சூப்பர் ஸ்டார் படங்களுக்கு வழக்கமாக பூஜை போடப்படும் ஏ.வி.எம். ஸ்டுடியோ பிள்ளையார் கோயிலிலேயே பூஜை போடப்பட்டு இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்துக்கு சூப்பர் ஸ்டார் முதல் கட்டமாக பதினைந்து நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருக்கிறார். தேவைப்பட்டால் இன்னமும் அதிக கால்ஷீட் தருவார் என்று கூறப்படுகிறது.

வேகமாக இப்படத்தை முடித்துவிட்டு “ரோபோ”வில் முழு கவனமும் செலுத்த திட்டமிட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார். இனிமேல் டாக் ஆப் தமிழ்நாடாக “குசேலன்” தான் இருக்கப்போகிறது.

0 comments: