Wednesday, January 9, 2008

'வர்ஷம்' பட இயக்குனர் கதை சொல்லிக் கொண்டிருந்தபோது திடீர் மரணம்!


தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷோபன். ராம்கோபால் வர்மாவின் பலபடங்களில் அவருக்கு துணை இயக்குனராக பணியாற்றியவர் இவர். ஷனம், ஷனம் என்ற ராம்கோபால் வர்மாவின் படம் மூலமாக நடிகராகவும் அறிமுகமானவர். அதன் பின்னர் ஒக ராஜா, ஒக ராணி, சங்கர்தாதா ஜிந்தாபாத் படங்களிலும் நடித்தார்.

தெலுங்கு போக்கிரி மகேஷ்பாபுவை வைத்து இவர் முதன்முதலில் இயக்கிய ”பாபி” படம் பெரும் வெற்றியடைந்தது. அதன்பின்னர் ரவிதேஜாவுக்காக இயக்கிய சண்டி திரைப்படமும் அதிரடியாக ஹிட் ஆனது. தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை தந்த ஷோபன் மூன்றாவதாக த்ரிஷாவை வைத்து இயக்கிய 'வர்ஷம்' அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இப்போது கன்னடத்தில் ஒரு படம் இயக்கிவரும் ஷோபன் தனது அடுத்த தெலுங்கு படம் ஒன்றின் கதை சொல்வதற்காக நடிகை பூமிகா வீட்டுக்கு சென்றிருந்தார். பூமிகாவிடம் அவர் கதை சொல்லிக் கொண்டிருந்தபோது பூமிகாவின் கணவர் பரத் தாக்கூரும் உடனிருந்தார். இடையில் திடீரென ஷோபனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார். பதறிப்போன பூமிகாவும், பரத் தாக்கூரும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சிக்க பாதிவழியிலேயே ஷோபன் பரிதாபமாக உயிரிழந்தார். இன்னமும் பூமிகா இந்த அதிர்ச்சியில் இருந்த மீளவில்லை. தன்னுடைய சீடருக்கு நேர்ந்த திடீர் மரணம் இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கும் கடுமையான அதிர்ச்சியை தந்திருக்கிறது.

புகழ்பெற்ற இயக்குனரை அநியாயமாக பறிகொடுத்த தெலுங்கு திரையுலகம் சோகக்கடலில் மூழ்கியிருக்கிறது. மறைந்த இயக்குனர் ஷோபனுக்கு முப்பத்தெட்டு வயது. பிரபல தெலுங்கு காமெடி நடிகர் லட்சுமிபதியின் சகோதரர் இவர்.

0 comments: